search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோம்நாத் சாட்டர்ஜி மரணம்"

    மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #SomnathChatterjee #SumitraMahajan
    கொல்கத்தா:

    பாராளுமன்ற உறுப்பினராக 10 முறை பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி(89). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக  பதவி வகித்தார்.

    மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 2008-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கி கொண்ட வேளையில் மக்களவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.

    இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் வசித்து வந்தார். கடந்த இருமாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் - இந்நாள் சபாநாயகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சோம்நாத் சாட்டர்ஜி வாழ்ந்த காலத்தில் தனது உடலை கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் முழு அரசு மரியாதைக்கு பின் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    அவரது உயிர் பிரிந்த மருத்துவமனையில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அவர் முன்னர் வக்கீலாக பணியாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கிருந்து மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜா பசந்தா ராய் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு ஏராளமான தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரது மறைவு செய்தியை அறிந்ததும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கொல்கத்தா வந்தடைந்தார். சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சுமித்ரா மகாஜன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

    இன்னும் சில நிமிடங்களில் இங்கிருந்து  இறுதி ஊர்வலம்  புறப்படும். கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக தன்னை தானமாக அளித்த  சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் அங்கு ஒப்படைக்கப்படும். #SomnathChatterjee #SumitraMahajan
    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee
    சென்னை:

    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    சோம்நாத் சாட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி நிர்மல் சந்திர சாட்டர்ஜியின் புதல்வரான சோம்நாத் சாட்டர்ஜி தலைசிறந்த கல்வியாளர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், மேற்கு வங்கத்திற்கும் பேரிழப்பு. அது மட்டுமல்ல அவரது இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன்:-

    மூத்த கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    சோம்நாத் சாட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SomnathChatterjee
    முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SomnathChatterjee
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

    அஸ்ஸாம் மாநிலம், திஸ்பூரில் பிறந்த சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்தார். பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சோம்நாத் சட்டர்ஜி, இந்தியாவிலேயே நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சாதனை படைத்தவர்.

    நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் பெயர் பெற்றவர்.


    அதுமட்டுமின்றி, 1996ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதினை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். சோம்நாத் சாட்டர்ஜி, மக்களவை தலைவராக ஜூன் 2004 முதல் மே 2009 வரை பதவி வகித்து, மக்களவையை திறம்பட வழிநடத்தியவர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மதிக்கப்பெற்றவர்.

    சோம்நாத் சாட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SomnathChatterjee
    ×